ஆடை-பித்தன் -கவிக்கோ (20-21)
ஆடை
பித்தன்
தன் சட்டையைக்
கிழித்துக்கொண்டிருந்தான்
சட்டையை ஏன்
கிழிக்கிறாய் ? என்றேன் .
கடிதத்தைப்
படிக்கவேண்டும்
என்றால் உறையைக்
கிழிக்கத்தானே வேண்டும்? “என்றான்
அவன் மேலும் சொன்னான் :
நான் ஆறிவிட்டேன் .
எனவே
இனிமேல் எனக்கு
இந்த காரச் சீலை
தேவையில்லை .
பொய்க்குத்தான்
ஆடை தேவை .
“மெய்” க்குத்
தேவையில்லை .
உங்கள் ஆடை
விலக்கப்பட்ட கனியைத்
தின்ற பாவத்தால்
நெய்யப்பட்டதல்லவா ?
உங்கள் ஆடை
இறந்து போன
கள்ளமின்மைக்குப்
போர்த்திய
சவக்கோடி அல்லவா ?
பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே ?
நீங்கள்
ஆபாசமானீர்கள் :
அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள் .
ஆடையை
முகவரி ஆக்கியபோது
நீங்கள் காணாமல் போனீர்கள்.
உங்கள் ஆடைகளை
ஒப்பனை அறையிலிருந்தே
பொறுக்கிக் கொள்கிறீர்கள் .
தேங்கிய நீர்தான்
பாசியை
உடுத்திக்கொள்கிறது .
அணைந்த நெருப்புத்தான்
சாம்பலை
அணிந்து கொள்கிறது
தோலும் ஆடைதான் என்பதைப்
பாம்பு அறிந்திருந்தத்து
நீங்கள் அறியவில்லை.
அர்த்தம்
வார்த்தையை
உடுத்திக்கொள்வதைப் போல்
உங்களால் உடுக்க
முடியவில்லை .
பித்தன்
-கவிக்கோ (20-21)

Comments
Post a Comment