சுவர்- பித்தன் -கவிக்கோ (24-25)

 

சுவர்

 

பித்தன்

 சுவரில்

கிறுக்கிகொண்டிருந்தான் .

 

“நான்

சுவரில் எழுதாதே “

என்ற வாசகத்தைச்

சுட்டிகாட்டினேன் .

 

சுவரில் தானே

 எழுத முடியும்

என்றான் பித்தன் .

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

 

வாசலும்

 சாளரங்களும்

சுவர் எழுத்துக்கல்தாமே ?

 

 

 

 

என் கிறுக்கல்களும்

உங்களுக்கு

வாசலும் சாளரமுமாக

 இருக்கும் .

 

 

 

எழுத்துக்கள் என்பதென்ன ?

அங்கீகரிக்கப்பட்ட  

கிறுக்கல்கள்தாமே ?

 

 

 

இறைவன்

பூமியைச்

 சுவராக

படைத்ததே

நம்மை கிறுக்கத்தானே ?

 

சூரியன்

தினமும்

வெள்ளையடித்தாலும்

இரவு நட்சத்திரங்களைக்

 கிறுக்கிகொண்டுதான்

இருக்கும் .

 

 

 

சூரியனின்

சுண்ணாம்பை விட

 நட்சத்திரக் கிறுக்கல்கள்

அழகானதல்லவா ?

 

 

 

என் கிறுக்கல்கள்

 நட்சத்திரங்களாகும் .

 

 

மின்னல் 

கிறுக்கலால்

வானச் சுவர்

பிரகாசிக்கிறதே .

 

 

 

என் கிறுக்கல்கள்

மின்னலாயிருக்கும் .

 

கனவுகள்

தூக்கச் சுவரின்

 கிறுக்கல்கள்தாமே?

 

 

 

நானும்

உங்கள் தூக்கங்களின் மீது

கிறுக்குகிறேன் .

என் கிறுக்கல்கள்

கனவுகளாயிருக்கும் .

 

 

 

உங்களால்

படிக்க முடியாதபோது

எழுத்துக்களைக்

கிறுக்கல் என்கிறீர்கள்.

 

எழுத்துக்களால்

எழுத முடியாதபோது

 நான் கிறுக்குகிறேன் .

 

 

பித்தன் -கவிக்கோ (24-25)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி