சுவர்- பித்தன் -கவிக்கோ (24-25)
சுவர்
பித்தன்
சுவரில்
கிறுக்கிகொண்டிருந்தான் .
“நான்
சுவரில் எழுதாதே “
என்ற வாசகத்தைச்
சுட்டிகாட்டினேன் .
சுவரில் தானே
எழுத முடியும்
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
வாசலும்
சாளரங்களும்
சுவர் எழுத்துக்கல்தாமே ?
என் கிறுக்கல்களும்
உங்களுக்கு
வாசலும் சாளரமுமாக
இருக்கும் .
எழுத்துக்கள் என்பதென்ன ?
அங்கீகரிக்கப்பட்ட
கிறுக்கல்கள்தாமே ?
இறைவன்
பூமியைச்
சுவராக
படைத்ததே
நம்மை கிறுக்கத்தானே ?
சூரியன்
தினமும்
வெள்ளையடித்தாலும்
இரவு நட்சத்திரங்களைக்
கிறுக்கிகொண்டுதான்
இருக்கும் .
சூரியனின்
சுண்ணாம்பை விட
நட்சத்திரக் கிறுக்கல்கள்
அழகானதல்லவா ?
என் கிறுக்கல்கள்
நட்சத்திரங்களாகும் .
மின்னல்
கிறுக்கலால்
வானச் சுவர்
பிரகாசிக்கிறதே .
என் கிறுக்கல்கள்
மின்னலாயிருக்கும் .
கனவுகள்
தூக்கச் சுவரின்
கிறுக்கல்கள்தாமே?
நானும்
உங்கள் தூக்கங்களின் மீது
கிறுக்குகிறேன் .
என் கிறுக்கல்கள்
கனவுகளாயிருக்கும் .
உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல் என்கிறீர்கள்.
எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன் .
பித்தன்
-கவிக்கோ (24-25)

Comments
Post a Comment