அனாதை-பித்தன் -கவிக்கோ (30)
அனாதை
அனாதையை ஆதரிப்பார்
யாருமில்லையா ?என்று
பித்தன்
கடைத்தெருவில்
கூவிக்கொண்டிருந்தான் .
யார் அந்த
அனாதை ? என்று கேட்டேன்
“உண்மை “ என்றவன் ,
கடைத்தெருவில்
அது அனாதையாக
அழுது கொண்டிருத்தது
அதை யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளவில்லை
என்று கூறினான்.
ஏன் ? என்றேன்
நெற்றியில் திருநீரோ ,
நாமமோ இல்லை ,
மார்பில்
சிலுவை இல்லை ,
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே அடையாளம்
கண்டுகொள்ளவில்லை ‘
என்றான்.
நீ மட்டும் எப்படி
அடையாளம் கண்டுகொண்டாய் ?
என்று கேட்டேன் .
யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளாததிலிருந்து
அதை நான்
அடையாளம் கண்டுகொண்டேன் .
மேலும்
அதன் உடலில்
சிலுவை அறையப்பட்ட
காயங்களும் ,கு
ண்டுகளும்
இருந்தன .
கழுத்தில்
தூக்கு கயிற்றின்
வடு இருந்தது .
அதன் உதடுகள்
விஷத்தால்
கறுத்திருந்தன .
அதனாலும்
அடையாளம்
கண்டுகொண்டேன்
என்றான்.
பித்தன்
-கவிக்கோ (30)

Comments
Post a Comment