வினா-பித்தன் -கவிக்கோ (32)




வினா

 

நீ விடைகளைத்

தேடுகிறவனா ? என்று

 பித்தனைக் கேட்டேன் .

 

 

 

‘இல்லை :நான்

வினாக்களின் காதலன் ‘

 என்றான்.

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

 

ஒன்றுமற்ற சூனியத்தில்

 வினாக்களே

படைப்புகளாக உதித்தன .

 

 

 

பரிணாமப் பாதையில்

வினாக்களே

நம் கால்களாக

 இருந்தன.

 

 

 

விடைகள்

 நாம் சிறிது நேரம்

தங்கி இளைப்பாறும்

சத்திரங்களே .

 

 

 

வினாக்களே

நம்மை எழுப்புகின்றன .

விடைகளோ

உறக்கமாய் இருக்கின்றன .

வினாக்கள்

நம்மைத் திறக்கின்றன :

விடைகளோ

நம்மை மூடுகின்றன .

 

 

 

 

 

வினாக்கள்

விளக்குகளாகவும்

 விடைகள்

இமைகளாகவும் இருப்பதை

நீங்கள் அறியவில்லையா ?

 

 

 

வினாவின் வெயிலுக்கு

 உங்கள் விடைகள்

வெறும் குடைகளே

 என்பதை அறிவீர்களா ?

 

 

 

விடைகளால்

வினாக்கள் சாவதில்லை :

அவை

விடைகளைத் தின்று

வளர்கின்றன .

 

 

 

உங்கள் விடைகளிலும்

வினாக்களின் கர்ப்பம்

இருப்பதை

 நீங்கள் அறிவீர்களா ?

 

 

 

ஒவ்வொரு வினாவும்

 பூவாய் மலர்கிறது :

அறிவு அதில்

 தேன் உண்ணுகிறது .

விடைகளுக்கு

மரணம் உண்டு .

வினாக்களுக்கு இல்லை .

 

 

 

பிரபஞ்ச மர்மத்தின்

கதவுகளுக்குச்

சாவிகளாக இருப்பவை

வினாக்களே :

விடைகள் அல்ல .

 

 

 

 

வாழ்க்கை தேர்வில்

 வெற்றி பெறுபவர்கள்

விடைகளை அறிந்த்தவர்கள் இல்லை :

வினாக்களை அறிந்தவர்களே .

 

பித்தன் -கவிக்கோ (32)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி