வினா-பித்தன் -கவிக்கோ (32)
வினா
நீ விடைகளைத்
தேடுகிறவனா ? என்று
பித்தனைக் கேட்டேன் .
‘இல்லை :நான்
வினாக்களின் காதலன் ‘
என்றான்.
அவன் மேலும் சொன்னான் :
ஒன்றுமற்ற சூனியத்தில்
வினாக்களே
படைப்புகளாக உதித்தன .
பரிணாமப் பாதையில்
வினாக்களே
நம் கால்களாக
இருந்தன.
விடைகள்
நாம் சிறிது நேரம்
தங்கி இளைப்பாறும்
சத்திரங்களே .
வினாக்களே
நம்மை எழுப்புகின்றன .
விடைகளோ
உறக்கமாய் இருக்கின்றன .
வினாக்கள்
நம்மைத் திறக்கின்றன :
விடைகளோ
நம்மை மூடுகின்றன .
வினாக்கள்
விளக்குகளாகவும்
விடைகள்
இமைகளாகவும் இருப்பதை
நீங்கள் அறியவில்லையா ?
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே
என்பதை அறிவீர்களா ?
விடைகளால்
வினாக்கள் சாவதில்லை :
அவை
விடைகளைத் தின்று
வளர்கின்றன .
உங்கள் விடைகளிலும்
வினாக்களின் கர்ப்பம்
இருப்பதை
நீங்கள் அறிவீர்களா ?
ஒவ்வொரு வினாவும்
பூவாய் மலர்கிறது :
அறிவு அதில்
தேன் உண்ணுகிறது .
விடைகளுக்கு
மரணம் உண்டு .
வினாக்களுக்கு இல்லை .
பிரபஞ்ச மர்மத்தின்
கதவுகளுக்குச்
சாவிகளாக இருப்பவை
வினாக்களே :
விடைகள் அல்ல .
வாழ்க்கை தேர்வில்
வெற்றி பெறுபவர்கள்
விடைகளை அறிந்த்தவர்கள்
இல்லை :
வினாக்களை அறிந்தவர்களே .
பித்தன்
-கவிக்கோ (32)

Comments
Post a Comment