அறிக்கை-பித்தன் -கவிக்கோ (34-37)
அறிக்கை
உன் கொள்கை என்ன ?
என்று பித்தனிடம் கேட்டேன் .
‘கொள்கையின்மை’
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
ஒரு கொள்கையை
ஏற்பவன்
கூண்டில் அடைபட்டுவிடுகிறான்
.
நான்
கூண்டில் அடைபடும்
பறவை அல்ல :
அது தங்கக் கூண்டாக
இருந்தாலும் சரி .
கூண்டுப் பறவை
கூண்டின் கூரையையே
வானம் என்று வாதாடும் .
சிறகு
சுமை என்று
சொல்லும் .
தத்துவங்கள் எல்லாம்
ஒரு மகா வாக்கியத்தின்
உரைகளே .
ஓர் உரையை மட்டும்
ஏற்பவன்
உண்மையின் பல
பரிணாமங்களைக்
காணாமல் போய்விடுவான் .
மதவாதி
என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது
என்கிறான் .
நானோ தேனீயாக
இருக்கிறேன் .
பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
இலட்சியம் செய்வதில்லை .
தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை .
எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்று தான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது.
ஒரு பூவின் தேன்
தேனீக்குப் போதாது .
நான் எப்போதும்
நிரம்பாதவனாக
இருக்கிறேன் .
சமுத்திரத்தைப் போல ,
அதனால்
ஜீவ நதிகள் என்னிடம்
வந்து கொண்டே இருக்கின்றன .
எந்த உருவத்தையும்
பதித்துக்கொள்ளாமலிருக்கிறேன்
.
கண்ணாடியைப் போல ,
அதனால்
எல்லா வடிவங்களின்
அழகையும் நான்
ரசிக்கிறேன் .
என்னை
முழுவதும் திறந்து
காட்டாதவனாக இருக்கிறேன் .
இரவைப் போல .
அதனால்
நட்சத்திரங்களும்
விளக்குகளும்
தணியாத ஆர்வத்தோடு
என்னை
தினமும் பார்க்கின்றன .
எனக்குள்
இருப்பதையெல்லாம்
பேசி விடாமல் இருக்கிறேன் :
வீணையைப் போல ,
அதனால்
மீண்டும் மீண்டும் நான்
மீட்டப்படுகின்றேன் .
என்னிடம்
மலர்வதையும்
கனிவதையும்
நான் ஒரே நேரத்தில்
கொடுத்து விடுவதில்லை :
மரத்தைப் போல .
அதனால் நான்
எதிர்பார்ப்போடு
நீருற்றப்படுகிறேன் .
முழுவதும்
புரிந்துகொள்ளப்பட
முடியாதவனாக இருக்கிறேன்
.கனவைப் போல ,
அதனால்
நான் யாருக்கும்
சலிப்பதில்லை .
நான் எல்லாவற்றையும்
புரிந்துகொள்ள முயல்வதில்லை .
புரிந்து கொள்ளப்பட்டவை
சுவாரஸ்யம் அற்றுப்போகும் .
நான் மர்மங்களின் ரசிகன்.
நான் ஆசைப்பட்டதை எல்லாம்
அடைந்துவிட வேண்டும்
என்று நினைப்பதில்லை ,
அதனால் என்
ஜீவ நெருப்பு
அணையாமல் இருக்கிறது .
நான் எப்போதும்
முடிக்க்கப்பட
முடியாதவனாக
இருக்கிறேன் :
இறைவனைப் பற்றிய
விவாதத்தைப் போல ,
அதனால் நான்
இருந்துகொண்டே இருப்பேன் .
பித்தன்
-கவிக்கோ (34-37)

Comments
Post a Comment