பக்க வாதம்-பித்தன் -கவிக்கோ (39-42)
பக்கவாதம்
நீதி தேவைதையின்
சிலையைப் பார்த்துப்
பித்தன் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் .
உங்கள்
நீதி தேவதை மட்டுமல்ல ,
அவளுடைய தீர்ப்புகளும்
குருடாகவே இருக்கின்றன ‘
என்றான் பித்தன்.
அவன் மேலும்
சொன்னான் :
ஒன்றை
நல்லது என்கிறீர்கள் :
ஒன்றை கெட்டது என்கிறீர்கள்.
இது குருட்டுத் தீர்ப்பல்லவா ?
உங்கள்
விருப்பும் வெறுப்பும்
நீதிபதிகளாக இருக்கின்றன .
காலமும் ,இடமும்
சந்தர்ப்ப சாட்சிகளாக
இருகின்றன .
உங்கள் தீர்ப்பு
உண்மையில் தீர்ப்பல்ல .
ஒரு பக்க வாதம்.
இந்தப்
பக்க வாதங்களால்
நீங்கள்
முடங்கிப் போகிறீர்கள்.
காலம் மாறும்போது
உங்கள் தீர்ப்பும்
மாறிவிடுகிறது .
போர்வையைக்
குளிர்காலத்தில்
நல்லது என்கிறீர்கள்
கோடைக்காலத்தில்
கெட்டது என்கிறீர்கள்
போர்வையில் இல்லை
நல்லதும் கெட்டதும் .
விசிறியைக்
கோடைக்காலத்தில்
விரும்புகிறீர்கள்
குளிர்காலத்தில்
வெறுக்கிறீர்கள்
விசிறியிடம் இல்லை
விருப்பும் வெறுப்பும் .
மழை பெய்தால்
குடியானவன் போற்றுகிறான்
குயவன் தூற்றுகிறான்
மழையிடம் இல்லை
பாரபட்சம்.
காற்று வீசினால்
அகல்விளக்கு
அணைந்து விடுகிறது
.தீக்குண்டம்
கொளுந்துவிட்டு
எரிகிறது .
காற்றிடம் இல்லை
பகையும் நட்பும்.
பாடலில்
பரவசமடைகிறீர்கள் .
வசவில் வருந்துகிறீர்கள்
இரண்டும்
ஒரே சப்த சாகரத்தின்
அலைகளே .
நெருப்பு
நல்லதா ? கெட்டதா?
நெருப்பு
நெருப்பாக மட்டுமே
இருக்கிறது .
நீங்கள்தான் அதை
நல்லதாகவோ
கெட்டதாகவோ
ஆக்கிக்கொள்கிறீர்கள் .
எது பூவானதோ
அதுவே முள்ளானது .
பூவைப் போலவே
முள்ளுக்கும்
இருத்தல்
நியாயம் உண்டு .
உங்களைக்
குத்துவதற்காக
முளைத்ததல்ல முள்.
நீங்கள்தான்
குத்திக்கொள்கிறீர்கள் .
இது நல்லது
இது கெட்டது
என்று பிரிப்பதற்கு நீ
ங்கள் கீறும் கோடு
ஓடும் நீரில்
கிழிக்கும் கோடல்லவா ?
நீங்கள்
தவறு என்று தள்ளும்
பொய்
ஓர் உயிரைக்
காப்பாற்றும்போது
புகழப்படுவதில்லையா ?
நீங்கள் குற்றமென்று கூறும்
கனவு
காதலர்களிடம்
அழகாகிவிடுவதில்லையா ?
நீங்கள்
இழிவானது என்று இகழும்
பாலுணர்வு
தாலியால்
புனிதமடை வதில்லையா ?
நீங்கள்
பாவமென்று பழிக்கும்
கொலை
போர்க்களத்தில்
வீரம் என்று
பாராட்டப்படுவதில்லையா ?
எப்போதும் கெட்டது என்று
எதை விலக்குவீர்கள் ?
கெட்டது என்றாலே
நல்லது
கெட்டுவிட்டது என்றுதான்
பொருள் .
வரம்பைத்
தெரிந்து கொள்ளுங்கள் .
அங்கேதான்
இந்த விபத்து நிகழ்கிறது .
நல்லதான் மிகையே
கெட்டதாகிவிடும்.
சாலை விதிகளைப் போலவே
இயற்கையிலும் விதிகள் உண்டு .
அந்த விதிகளுக்கு
இசைந்து நடப்பவன் பத்திரமாக
இருக்கிறான் .
மீறுகிறவன்
விபத்துக்கு ஆளாகிறான் .
பாலாவதும்
சீழாவதும்
ஒரே ரத்தம் தான் .
முலையாவதும்
புண்ணாவதும்
உங்கள் கையில்
இருக்கிறது .
பித்தன்
-கவிக்கோ (39-42)

Comments
Post a Comment