பக்க வாதம்-பித்தன் -கவிக்கோ (39-42)

 

பக்கவாதம்

 

நீதி தேவைதையின்

  சிலையைப் பார்த்துப்

பித்தன் சிரித்தான்.

 

 

ஏன் சிரிக்கிறாய் ?

 என்று கேட்டேன் .

 

உங்கள்

நீதி தேவதை மட்டுமல்ல ,

அவளுடைய தீர்ப்புகளும்

 குருடாகவே இருக்கின்றன ‘

என்றான் பித்தன்.

 

அவன் மேலும் சொன்னான் :

 ஒன்றை

 நல்லது என்கிறீர்கள் :

ஒன்றை கெட்டது  என்கிறீர்கள்.

இது குருட்டுத் தீர்ப்பல்லவா ?

 

 

 

உங்கள்

விருப்பும் வெறுப்பும்

நீதிபதிகளாக இருக்கின்றன .

 

 

 

காலமும் ,இடமும்

சந்தர்ப்ப சாட்சிகளாக

 இருகின்றன .

 

 

 

உங்கள் தீர்ப்பு

 உண்மையில் தீர்ப்பல்ல .

ஒரு பக்க வாதம்.

 

 

 

 

இந்தப்

பக்க வாதங்களால்

 நீங்கள்

முடங்கிப் போகிறீர்கள்.

 

 

காலம் மாறும்போது

 உங்கள் தீர்ப்பும்

மாறிவிடுகிறது .

 

 

போர்வையைக்

குளிர்காலத்தில்

நல்லது என்கிறீர்கள்

கோடைக்காலத்தில்

கெட்டது என்கிறீர்கள்

போர்வையில் இல்லை

நல்லதும்  கெட்டதும் .

 

 

விசிறியைக்

கோடைக்காலத்தில்

விரும்புகிறீர்கள்

 குளிர்காலத்தில்

வெறுக்கிறீர்கள்

விசிறியிடம் இல்லை

விருப்பும் வெறுப்பும் .

 

மழை பெய்தால்

குடியானவன் போற்றுகிறான்

குயவன் தூற்றுகிறான்

மழையிடம் இல்லை

பாரபட்சம்.

 

 

காற்று வீசினால்

அகல்விளக்கு

அணைந்து விடுகிறது

.தீக்குண்டம்

கொளுந்துவிட்டு

எரிகிறது .

காற்றிடம் இல்லை

பகையும் நட்பும்.

 

பாடலில்

பரவசமடைகிறீர்கள் .

வசவில் வருந்துகிறீர்கள்

இரண்டும்

ஒரே சப்த சாகரத்தின்

 

 அலைகளே .

 

நெருப்பு

நல்லதா ? கெட்டதா?

 

 

நெருப்பு

நெருப்பாக மட்டுமே

 இருக்கிறது .

நீங்கள்தான் அதை

நல்லதாகவோ

கெட்டதாகவோ

ஆக்கிக்கொள்கிறீர்கள் .

 

 

எது பூவானதோ

 அதுவே முள்ளானது .

பூவைப் போலவே

 முள்ளுக்கும்

இருத்தல்

நியாயம் உண்டு .

 

 

உங்களைக்

குத்துவதற்காக

முளைத்ததல்ல முள்.

நீங்கள்தான்

குத்திக்கொள்கிறீர்கள் .

 

 

இது நல்லது

இது கெட்டது

என்று பிரிப்பதற்கு நீ

ங்கள் கீறும் கோடு

ஓடும் நீரில்

கிழிக்கும் கோடல்லவா ?

 

 

நீங்கள்

தவறு என்று தள்ளும்

பொய்

ஓர் உயிரைக்

காப்பாற்றும்போது

புகழப்படுவதில்லையா ?

 

 

நீங்கள் குற்றமென்று கூறும்

கனவு

காதலர்களிடம்

அழகாகிவிடுவதில்லையா ?

 

 

நீங்கள்

இழிவானது என்று இகழும்

பாலுணர்வு

தாலியால்

புனிதமடை வதில்லையா ?

 

 

நீங்கள்

பாவமென்று பழிக்கும்

 கொலை

போர்க்களத்தில்

வீரம் என்று

பாராட்டப்படுவதில்லையா ?

 

எப்போதும் கெட்டது என்று

 எதை விலக்குவீர்கள் ?

 

 

கெட்டது என்றாலே

நல்லது

கெட்டுவிட்டது என்றுதான்

 பொருள் .

 

 

 

 

 

வரம்பைத்

 தெரிந்து கொள்ளுங்கள் .

அங்கேதான்

இந்த விபத்து நிகழ்கிறது .

நல்லதான் மிகையே கெட்டதாகிவிடும்.

 

சாலை விதிகளைப் போலவே

இயற்கையிலும் விதிகள் உண்டு .

 

 

அந்த விதிகளுக்கு

 இசைந்து நடப்பவன் பத்திரமாக இருக்கிறான் .

மீறுகிறவன்

 விபத்துக்கு ஆளாகிறான் .

 

 

பாலாவதும்

சீழாவதும்

 ஒரே ரத்தம் தான் .

 

 

முலையாவதும்

புண்ணாவதும்

உங்கள் கையில்

இருக்கிறது . 

 

பித்தன் -கவிக்கோ (39-42)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி