சிதறு தேங்காய்-பித்தன் -கவிக்கோ (44)
சிதறு தேங்காய்
சிதறு தேங்காயைப்
பொறுக்கிக் கொண்டிருந்தவனைத்
தடுத்து நிறுத்தினான் பித்தன் .
அவனை ஏன் தடுக்கிறாய் ?
என்று கேட்டேன் .
நீங்கள் உங்களைப்
பொறுக்க வேண்டியிருக்கத்
தேங்காயைப்
பொறுக்கி கொண்டிருக்கிறீர்களே
என்றான் பித்தன்
அவன் மேலும் சொன்னான் :
நீங்கள் உடைந்து
துண்டு துண்டாகிப்
போனதை உணரவில்லையா ?
வீட்டிலும் வெளியிலும்
நீங்கள்
சிதறிக் கிடப்பதை
அறியவில்லையா ?
மனமும்
வயிறும் உடைக்க
நீங்கள் ஒருவரே
எத்தனை துண்டுகளாகிவிட்டீர்கள் !
உங்கள் துண்டுகளுக்கிடையே
ஓயாத போர் நடக்கிறது .
ஒவ்வொரு துண்டிலும்
நீங்கள்
வெவ்வேறாக இருக்கிறீர்கள் .
உங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடிகளால்
உங்கள் பிம்பங்களும்
உடைந்து போகின்றன .
நீங்கள்
கடைத் தேங்காயாக
இருக்கிறீர்கள் .
வழிப் பிள்ளையாருக்காக
உடைக்கப்படுகிறீர்கள் .
சிதறிக்கிடக்கும் உங்களை
யார் யாரோ பொறுக்கிச்
சாப்பிடுகிறார்கள் .
உடைந்து
சிதறிக் கிடப்பவர்களே !
உங்களை எப்படிப்
பொறுக்கப் போகிறீர்கள் ?
அப்படியே பொறுக்கினாலும்
சிந்திப் போன
உங்கள் நீரை
எப்படி சேகரிப்பீர்கள்
பித்தன்
-கவிக்கோ (44)

Comments
Post a Comment