பயணம்-பித்தன் -கவிக்கோ (46-48)

 

பயணம்

 

பித்தன்

 பின் பக்கமாக

நடந்துகொண்டிருந்தான் .

 

 

என்ன செய்கிறாய் ?

என்று கேட்டேன் .

 

 

திரும்புகிறேன் என்றான் .

 

அவன் மேலும் சொன்னான் :

 

புறப்படுதல் அல்ல ,

திரும்புதல் தான் பயணம் .

 

வெளியே புறப்படுதல் அல்ல ,

வெளியிலிருந்து புறப்படுதல்தான்

பயணம் .

 

 

நீங்கள்

 உங்களிடமிருந்து புறப்படுகிறீர்கள் .

அதனால்தான் நீங்கள்

ஊர்போய்ச் சேர்வதில்லை .

 

 

உங்களை

நோக்கிப் புறப்படுங்கள் .

அதுதான் பயணம் .

 

 

 

 

 

மூட்டை முடிச்சுகளோடு

 புறப்படாதீர்கள் .

அவற்றை

துறப்பதற்குத்தான் பயணம் .

 

இறைவனைத் தேடிப்

புறப்படாதீர்கள்.

அவன் காணாமல்

போன பொருள் அல்ல.

 

உங்கள்

சுயத்தை நோக்கிப்

 புறப்படுங்கள் .

 

அங்கே இறைவன்

 உங்களுக்காகக்

காத்திருக்கிறான் .

 

சுயத்தை நோக்கிப்

 புறப்பட கூட

 வேண்டியதில்லை .

 

 

ஏனென்றால்

 நீங்கள்

அங்கே தான்

இருக்கிறீர்கள் .

 

 

இதை அறிவதுதான்

 பயணம் .

 

 

 

 

 

 

சுயமும்

இலட்சியமல்ல :

சத்திரம்தான்

கடைசிச்  சத்திரம் .

 

அடைவதற்கல்ல ,

அழிப்பதற்குத்தான்

பயணம் .

 

 

இடத்தின் மீது

நடப்பதல்ல ,

காலத்தின் மீது

நடப்பதுதான் பயணம் .

 

 

நினைவிருக்கட்டும்

பயணம் என்பது

கால்களால் நடப்பதல்ல .

 

 

நீங்கள் விளக்காய் இருங்கள் .

உங்கள் ஒளி

பயணம் செய்யட்டும் .

 

 

பூக்களே!

 விதைக்குத் திரும்புங்கள் .

 

 

உங்கள் பயணம்

உங்கள் பாதையில்

நடக்கட்டும் :

மற்றவர்கள் போட்ட

பாதையில் அல்ல .

 

 

 

 

நதியின் பாதையைப்போல்

உங்கள் பாதை

உங்கள் பயணத்தால்

உண்டாகட்டும் .

 

 

பறவையின்

பாதையைப் போல்

உங்கள் பாதை

சுவிடற்றதாக இருக்கட்டும் .

 

 

சுவடுகளை பதிப்பது

பயணமல்ல .

 

 

பயணத்தின் மதிப்பு

நீங்கள்

எங்கிருந்து

புறப்படுகிறீர்கள்

 என்பதில் இருக்கிறது  .

 

 

தொட்டிலிலிருந்து

புறப்படுகிறவன்

பாடையை அடைகின்றான் .

 

 

நீங்கள்

பாடையிலிருந்து

புறப்படுங்கள் .

 

 

வில்லிருந்து

புறப்படாதீர்கள் .

பூவிலிருந்து புறப்படுங்கள் .

உங்கள் பயணம்

சப்தத்திலிருந்து

மௌனத்திருக்குச் செல்லும்

இசையைப் போல் இருக்கட்டும் .

 

பித்தன் -கவிக்கோ (46-48)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி