பயணம்-பித்தன் -கவிக்கோ (46-48)
பயணம்
பித்தன்
பின் பக்கமாக
நடந்துகொண்டிருந்தான் .
என்ன செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
திரும்புகிறேன் என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
புறப்படுதல் அல்ல ,
திரும்புதல் தான்
பயணம் .
வெளியே புறப்படுதல்
அல்ல ,
வெளியிலிருந்து
புறப்படுதல்தான்
பயணம் .
நீங்கள்
உங்களிடமிருந்து புறப்படுகிறீர்கள் .
அதனால்தான் நீங்கள்
ஊர்போய்ச் சேர்வதில்லை
.
உங்களை
நோக்கிப்
புறப்படுங்கள் .
அதுதான் பயணம் .
மூட்டை முடிச்சுகளோடு
புறப்படாதீர்கள் .
அவற்றை
துறப்பதற்குத்தான்
பயணம் .
இறைவனைத் தேடிப்
புறப்படாதீர்கள்.
அவன் காணாமல்
போன பொருள் அல்ல.
உங்கள்
சுயத்தை நோக்கிப்
புறப்படுங்கள் .
அங்கே இறைவன்
உங்களுக்காகக்
காத்திருக்கிறான் .
சுயத்தை நோக்கிப்
புறப்பட கூட
வேண்டியதில்லை .
ஏனென்றால்
நீங்கள்
அங்கே தான்
இருக்கிறீர்கள் .
இதை அறிவதுதான்
பயணம் .
சுயமும்
இலட்சியமல்ல :
சத்திரம்தான்
கடைசிச் சத்திரம் .
அடைவதற்கல்ல ,
அழிப்பதற்குத்தான்
பயணம் .
இடத்தின் மீது
நடப்பதல்ல ,
காலத்தின் மீது
நடப்பதுதான் பயணம் .
நினைவிருக்கட்டும்
பயணம் என்பது
கால்களால் நடப்பதல்ல .
நீங்கள் விளக்காய் இருங்கள்
.
உங்கள் ஒளி
பயணம் செய்யட்டும் .
பூக்களே!
விதைக்குத் திரும்புங்கள் .
உங்கள் பயணம்
உங்கள் பாதையில்
நடக்கட்டும் :
மற்றவர்கள் போட்ட
பாதையில் அல்ல .
நதியின் பாதையைப்போல்
உங்கள் பாதை
உங்கள் பயணத்தால்
உண்டாகட்டும் .
பறவையின்
பாதையைப் போல்
உங்கள் பாதை
சுவிடற்றதாக
இருக்கட்டும் .
சுவடுகளை பதிப்பது
பயணமல்ல .
பயணத்தின் மதிப்பு
நீங்கள்
எங்கிருந்து
புறப்படுகிறீர்கள்
என்பதில்
இருக்கிறது .
தொட்டிலிலிருந்து
புறப்படுகிறவன்
பாடையை அடைகின்றான் .
நீங்கள்
பாடையிலிருந்து
புறப்படுங்கள் .
வில்லிருந்து
புறப்படாதீர்கள் .
பூவிலிருந்து
புறப்படுங்கள் .
உங்கள் பயணம்
சப்தத்திலிருந்து
மௌனத்திருக்குச்
செல்லும்
இசையைப் போல்
இருக்கட்டும் .
பித்தன்
-கவிக்கோ (46-48)

Comments
Post a Comment