இருள்-பித்தன் -கவிக்கோ (53-54)

 

இருள்

 

 

எல்லோரும்

விளக்கேற்றும் அந்தியில்  

பித்தன் விளக்கை அணைத்தான் .

 

விளக்கை ஏன் அனைத்தாய் ?

என்று கேட்டேன்.

 

பார்ப்பதற்கு என்றான் .

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

காதலி

வெளிச்சத்தில்

தன்னை வெளிப்படுத்தமாட்டாள்.

கடவுளும் அப்படியே .

 

 

ஆதியும் இருள் :

அந்தமும் இருள் .

இருளில் இருக்கும்போது

நீங்கள்

இரண்டையும் அறிகிறீர்கள் .

 

 

இருள்

அண்ட சராசரங்களின்

தாய் .

ஒளி அதன் முலைப்பால் .

 

 

இருள்

இறைவனின்

கரும் பலகை .

படைப்புகளை அவன்

அதில்தான் எழுதுகிறான் .

 

 

 

இருள் ஆழமான கவிதை .

விளக்குகள் அதற்கு

உரை சொல்ல

முயன்று

 தோற்றுப்போகின்றன .

 

 

 

 

 

வானம்

கோடிக்கணக்கான

கண் திறந்து

இமை கொட்டாமல் பார்ப்பது

இருளின் அழகைத்தான் .

 

 

ஒளியில் நீங்கள்

பிறரைத்தான்

பார்க்கிறீர்கள்.

இருளில்தான் நீங்கள்

உங்களைப் பார்க்கிறீர்கள்.

 

 

கூட்டின் இருளில்

 தவமிருக்கும்

பட்டாம் பூச்சி

சிறகுகளைப் பெறுகிறது .

 

 

 

நீங்கள்

இருளிலிருந்து

 ஒளிக்குச் செல்லுங்கள்

என்கிறீர்கள்.

 

 

 

நானோ

 ஒளியிலிருந்து

இருளுக்குச் செல்லுங்கள்

என்கிறேன் .

 

 

தீபங்கள் எல்லாம்

 அணையும் போதுதான்  

ஞானம் பிறக்கிறது .

 

 

பித்தன் -கவிக்கோ (53-54)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி