இருள்-பித்தன் -கவிக்கோ (53-54)
இருள்
எல்லோரும்
விளக்கேற்றும் அந்தியில்
பித்தன் விளக்கை
அணைத்தான் .
விளக்கை ஏன் அனைத்தாய் ?
என்று கேட்டேன்.
பார்ப்பதற்கு என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
காதலி
வெளிச்சத்தில்
தன்னை வெளிப்படுத்தமாட்டாள்.
கடவுளும் அப்படியே .
ஆதியும் இருள் :
அந்தமும் இருள் .
இருளில் இருக்கும்போது
நீங்கள்
இரண்டையும் அறிகிறீர்கள் .
இருள்
அண்ட சராசரங்களின்
தாய் .
ஒளி அதன் முலைப்பால் .
இருள்
இறைவனின்
கரும் பலகை .
படைப்புகளை அவன்
அதில்தான் எழுதுகிறான் .
இருள் ஆழமான கவிதை .
விளக்குகள் அதற்கு
உரை சொல்ல
முயன்று
தோற்றுப்போகின்றன .
வானம்
கோடிக்கணக்கான
கண் திறந்து
இமை கொட்டாமல் பார்ப்பது
இருளின் அழகைத்தான் .
ஒளியில் நீங்கள்
பிறரைத்தான்
பார்க்கிறீர்கள்.
இருளில்தான் நீங்கள்
உங்களைப் பார்க்கிறீர்கள்.
கூட்டின் இருளில்
தவமிருக்கும்
பட்டாம் பூச்சி
சிறகுகளைப் பெறுகிறது .
நீங்கள்
இருளிலிருந்து
ஒளிக்குச் செல்லுங்கள்
என்கிறீர்கள்.
நானோ
ஒளியிலிருந்து
இருளுக்குச் செல்லுங்கள்
என்கிறேன் .
தீபங்கள் எல்லாம்
அணையும் போதுதான்
ஞானம் பிறக்கிறது .
பித்தன்
-கவிக்கோ (53-54)

Comments
Post a Comment