மத்திய ரேகை-பித்தன் -கவிக்கோ (56-57)
மத்திய ரேகை
பித்தன்
கவடி ஆட்டத்தைப்
பார்த்துக்
கொண்டிருந்தான் .
கவடி உனக்கு
பிடிக்குமா ? என்று கேட்டேன் .
‘நடுக்’கோடு எனக்குப் பிடிக்கும்
என்றவன்,
நடுக்கோட்டைத்
தொடுவதால்
அவர்கள் பிழைகிறார்கள் .
உயிரின் ரகசியம்
நடுக்கோட்டில் இருக்கிறது
என்று கூறினான்.
அவன் மேலும்
சொன்னான் :
மத்திய ரேகைக்குச்
செல்லுகிறவர்கள்
ஜீவ நீரை
அருந்துகிறார்கள் .
துருவங்களுக்குப்
போகின்றவர்கள்
மரணத்தின் வலையில்
விழுகிறார்கள் .
மிகை
நல்லதையும்
தீயதாக்கி விடுகிறது .
ஆலகாலம் என்பது
வேறொன்றுமில்லை .
அமிர்தத்தின் மிகைதான் .
வைகறையும் அந்தியும்
அழகாய் இருப்பதற்குக்
காரணம்
அவை நடுவில் இருக்கின்றன .
அதனால்
இருள் ,ஒளி இரண்டும்
அவற்றை
அலங்கரிக்கின்றன .
வாதப் பிரதிவாதங்கள்
இரண்டு கரைகள்.
உண்மையோ
நதியாக
இரண்டுக்கும்
நடுவில் ஓடுகிறது .
பூவின் சாரம்
நடுவில் ஒளிந்திருக்கும்
தேனில் இருக்கிறது .
உதிரும் இதழ்களில்
இல்லை .
மையத்திலிருந்து
விலகும் எதுவும்
வீரியம் இழக்கிறது .
வாழ்க்கை என்பது
கழைக் கூத்து .
சமநிலை தவறுகிறவன்
விழுந்து விடுகிறான் .
பித்தன்
-கவிக்கோ (56-57)

Comments
Post a Comment