நிகழ்- பித்தன் -கவிக்கோ (59)
நிகழ்
பித்தன்
ஒரு காலைத்
தூக்கிய படி
நின்றுகொண்டிருந்தான்.
என்ன
நடராஜ நடனாமா ?
என்று கேட்டேன் .
இல்லை :
ஒரு காலையாவது
நிகழ்காலத்தில்
வைக்கப்பார்க்கிறேன் :
முடியவில்லை என்றான் .
அவன் மேலும் சொன்னான் :
இட்ட அடி
இறந்த காலத்தில் :
எடுத்த அடி
எதிர்காலத்துக்கு :
அந்த அடியிலும்
இறந்த காலத்தின்
புழுதி .
எங்கே இருக்கிறது
நிகழ்காலம் ?
இருக்கிறேன் என்று
நீ சொல்லும்போதே
ஒவ்வோர் எழுத்தையும்
இறந்த காலம்
விழுங்கி கொண்டிருப்பதைப்
பார் .
இந்தக் கணம் என்று
நீ சுட்டும்போதே
அது இறந்த்த கால
உண்டியலில் விழுந்துவிடுவதைப்
பார் .
இறந்த காலத்திற்கும்
எதிர்காலத்திற்கும்
இடையில்
கோடு கிழிக்க
முயல்கிறீர்கள் .
ஓடும் நீரில்
கோடு எப்படிக்
கிழிப்பீர்கள் ?
தன் வாலையே
விழுங்கிக்கொண்டிருக்கும்
கால சர்ப்பத்தில்
நீங்கள்
பரமபதம் விளையாடுகிறீர்கள்.
காலம் என்பதே
ஒரு பொய்க்கணக்கு
அதில்
நிகழ்காலம் என்பது
போலித் தொகை .
பித்தன் -கவிக்கோ (59)

Comments
Post a Comment