நிகழ்- பித்தன் -கவிக்கோ (59)

 

நிகழ்

 

 

பித்தன்

ஒரு காலைத்

 தூக்கிய படி

நின்றுகொண்டிருந்தான்.

 

 

என்ன

நடராஜ நடனாமா ?

என்று கேட்டேன் .

 

இல்லை :

ஒரு காலையாவது

 நிகழ்காலத்தில்

வைக்கப்பார்க்கிறேன் :

முடியவில்லை என்றான் .

அவன் மேலும் சொன்னான் :

 

 

 

இட்ட அடி

இறந்த காலத்தில் :

எடுத்த அடி

எதிர்காலத்துக்கு :

அந்த அடியிலும்

இறந்த காலத்தின்

புழுதி .

 

 

எங்கே இருக்கிறது

நிகழ்காலம் ?

 

 

 

 

இருக்கிறேன் என்று

 நீ  சொல்லும்போதே  

ஒவ்வோர் எழுத்தையும்

இறந்த காலம்

விழுங்கி கொண்டிருப்பதைப்

 பார் .

 

 

இந்தக் கணம் என்று

நீ சுட்டும்போதே

அது இறந்த்த கால

உண்டியலில் விழுந்துவிடுவதைப்

 பார் .

 

 

இறந்த காலத்திற்கும்

எதிர்காலத்திற்கும்

இடையில்

 கோடு கிழிக்க

முயல்கிறீர்கள் .

 

ஓடும் நீரில்

 கோடு எப்படிக்

கிழிப்பீர்கள் ?

 

 

 

தன் வாலையே

விழுங்கிக்கொண்டிருக்கும்

கால சர்ப்பத்தில்

 நீங்கள்

 பரமபதம் விளையாடுகிறீர்கள்.

 

 

காலம் என்பதே

 ஒரு பொய்க்கணக்கு

அதில்

 நிகழ்காலம் என்பது

போலித் தொகை .

 

 

 பித்தன் -கவிக்கோ (59)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி