கதவு-பித்தன் -கவிக்கோ (61-62)
கதவு
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான் .
ஏன் இப்படிச் செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
கதவு திறப்பதற்கா ?
மூடுவதற்கா ?
என்று அவன் கேட்டான் .
அவன் மேலும்
சொன்னான் :
கதவுகள்
சிலநேரம்
இமைகளாகத்
தெரிகின்றன .
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன .
சில நேரம்
உதடுகளாகின்றன.
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல .
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ , இனம்புரியாத
சம்பந்தம் இருக்கிறது .
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது .
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது :
பிரிவும் இருக்கிறது.
நாம்
உள்ளே இருக்கிறோமா ?
வெளியே இருக்கிறோமா ?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன.
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம் .
மூடிய
கதவு உள்ளே
இருப்பவற்றின்
மதிப்பைக் கூட்டுகிறது .
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல ,
நமக்கும்
கதவுகள் உண்டு .
நாம்
நமக்குள்ளே செல்லவும் ,
நம்மை விட்டு வெளியேறவும்
.
ஜனனத்தில்
ஒரு கதவு
திறக்கிறது .
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது .
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா ?
வெளியேறுகிறோமா ?
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார் ‘ என்று
கேட்காதே .
ஒரு
வேளை அது
நீயாக இருக்கலாம் .
பித்தன்
-கவிக்கோ (61-62)

Comments
Post a Comment