கதவு-பித்தன் -கவிக்கோ (61-62)

 

கதவு

 

 

பித்தன்

 கதவை

 மூடிக்கொண்டும்

திறந்துகொண்டும்

இருந்தான் .

 

 

ஏன் இப்படிச் செய்கிறாய் ?

என்று கேட்டேன் .

 

 

கதவு திறப்பதற்கா ?

மூடுவதற்கா ?

என்று அவன் கேட்டான் .

 

அவன் மேலும் சொன்னான் :

 

கதவுகள்

சிலநேரம்

இமைகளாகத்

தெரிகின்றன .

 

 

சில நேரம்

பூவிதழ்களாக

மலர்கின்றன .

 

சில நேரம்

 உதடுகளாகின்றன.

 

 

 

பயணம் முடிந்து

 வீடு திரும்புகிறவனுக்கும்

 சிறையில் கிடப்பவனுக்கும்

 கதவு திறப்பது என்பது

 ஒரே அர்த்தம் உடையதல்ல .

 

 

 

கதவுகளுக்கும்

 சிறகுகளுக்கும்

ஏதோ , இனம்புரியாத

சம்பந்தம் இருக்கிறது .

 

 

 

கதவின்

 திறப்பிலும்

மூடலிலும்

 கேள்வியும் பதிலும்

 இருக்கிறது .

 

 

கதவுகளில்

சந்திப்பும் இருக்கிறது :

பிரிவும் இருக்கிறது.

 

 

நாம்

உள்ளே இருக்கிறோமா ?

வெளியே இருக்கிறோமா ?

என்பதைக்

கதவுகளே தீர்மானிக்கின்றன.

 

 

நாம்

கதவு எண்களில்

 வசிக்கிறோம் .

 

மூடிய

 கதவு உள்ளே

இருப்பவற்றின்

மதிப்பைக் கூட்டுகிறது .

 

 

 

 

 

நம்

வீட்டுக்கு மட்டுமல்ல ,

நமக்கும்

கதவுகள் உண்டு .

நாம்

நமக்குள்ளே செல்லவும் ,

நம்மை விட்டு வெளியேறவும் .

 

 

ஜனனத்தில்

 ஒரு கதவு

 திறக்கிறது .

மரணத்தில்

 ஒரு கதவு

 திறக்கிறது .

இரண்டிலும் நாம்

பிரவேசிக்கிறோமா ?

 வெளியேறுகிறோமா ?

 

 

கதவு தட்டும்

 ஓசை கேட்டால்

‘யார் ‘ என்று

 கேட்காதே .

 

 

 

ஒரு

வேளை அது

 நீயாக இருக்கலாம் .

 

 

பித்தன் -கவிக்கோ (61-62)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி