வீடு-பித்தன் -கவிக்கோ (64-66)
வீடு
வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களை
பார்த்து
பித்தன் சிரித்தான் .
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் ,
கூடு கட்டுவதாக
நினைத்துக்கொண்டு
இந்தப் பறவைகள்
கூண்டுகள் செய்கின்றன
‘என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
வீடு கட்டுவதற்கு
மலையிலிருந்து
கற்களைக்
கொண்டு வருகிறீர்கள் .
மலையின் மௌனத்தையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால் .....
காட்டிலிருந்து
மரங்களை
கொண்டு வருகிறீர்கள் .
காட்டின்
சுதந்திரத்தை
உங்களால்
கொண்டுவர முடிந்திருந்தால்...
கடலிலிருந்து
சிப்பிகளைக்
கொண்டு வருகிறீர்கள்.
கடலின்
பெருமையையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால்...
நதியிலிருந்து
நீரைக்
கொண்டு வருகிறீர்கள் .
நதியின்
பாடலையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால்...
வெயிலிலிருந்து தப்பிக்க
கூரை கட்டுகிறீர்கள்.
அதனால்
நிலவை
இழந்துவிடுகிறீர்கள்.
புயலைத்
தடுக்கச்
சுவர் எழுப்புகிறீர்கள் .
அதனால்
தென்றலையும் தடுத்துவிடு
கிறீர்கள் .
நான்கு சுவர்களால்
நீங்கள்
நான்கு திசைகளையும்
இழந்து விடவில்லையா ?
உங்கள்
வீடுகளுக்குள் மட்டுமல்ல ,
உங்களுக்குள்ளும்
அறைகளைக்
கட்டிக்கொள்கிறீர்கள்.
உங்கள் வீடு
மொட்டாகவும்
நீங்கள் காற்றாகவும்
இருந்திருந்தால்
உங்கள் வாசம்
வாசமாகியிருக்குமே !
உங்கள் வீடு
தாயின் மார்பாகவும்
நீங்கள்
ரத்தமாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
பாலாகியிருப்பீர்களே !
உங்கள் வீடு
கூடாகவும்
நீங்கள்
பட்டாம்பூச்சியாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
சிறகுகளை
பெற்றிருப்பீர்களே !
வீட்டுக்குள்
நுழையும்போது
செருப்புகளை மட்டுமே
உங்களால்
வெளியே விடமுடிகிறது .
வெளியே செல்லும்போது
நத்தையைப் போல்
வீட்டையும் சுமந்துதான்
செல்லுகிறீர்கள் .
உங்கள் வீட்டுக்குள்
நுழையும்போதெல்லாம்
உங்கள் ஏக்கம்
உங்கள் வீட்டைத்
தேடுகிறதல்லவா ?
குயில்
கூடு கட்டுவதில்லை
அதனால் தான் அது
பாடுகிறது .
பித்தன்
-கவிக்கோ (64-66)

Comments
Post a Comment