பெண்-பித்தன் -கவிக்கோ (68-69)
பெண்
பெண்களின் கூடடதைக்கண்டு
பித்தன் விலகி
ஓடினான்.
நீ பெண்களை வெறுப்பவனா ?
என்று கேட்டேன் .
இல்லை :அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிசெல்கிறேன் .
பெண்
தூரத்தில்தான்
அழகாயிருக்கிறாள் என்றான் .
அவன் மேலும் சொன்னான் .
சொர்க்கத்தையும்
நரகத்தையும் பூமியிலே நாம்
சுவைத்துப்
பார்க்கவே
இறைவன்
பெண்ணைப் படைத்தான் .
நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம் :
அவள் வழியாகத்தான்
வெளியேறவும்
வேண்டும் .
அவள்
பொருள் புரியாத கவிதை :
அதனால்தான்
அவள் கவர்ச்சி
மங்குவதில்லை .
அவள் தாயாகிப்
பரிபாலிக்கிறாள் .
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள் .
நெருப்புக்க்கன்னாடியில்
பிரதிபலிக்கும்
நம் விரோத பிம்பம்
அவள்.
நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்.
அழகான ஆயுதங்களால்
நம்மைத் தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி அவள்.
அவள் சரக்கூடு
தீர்வதில்லை.
அவளிடம் தோற்பதால்
நாம் தப்புகிறோம் .
நம்மை
இரையாகப்
பிடித்துண்ண
இருட்டு மூலைகளில்
அவள்
வலை பின்னுகிறாள்.
நம்மை
விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள்
சலிக்காமல்
விளையாடுகிறாள்.
அவள் ஆகர்ஷணத்தில்
அடிமைகளாகி
அவளையே
சுற்றிச் சுழலும்
பரிதாபமான
கிரகங்கள் நாம் .
நாம்
காணாமல் போவதும்
அவளிடமே :
நம்மைக் கண்டெடுப்பதும்
அவளிடமே .
பெண்ணே!
உன்னிடமிருந்து
நம்மை காப்பாற்று என்று
பிராத்திப்போமாக .
பித்தன் -கவிக்கோ (68-69)

Comments
Post a Comment