உறக்கம்-பித்தன் -கவிக்கோ (74-75)
உறக்கம்
பித்தன்
கண் மூடியபடி
படித்திருந்தான் .
என்ன உறங்குகிறாயா ?
என்று கேட்டேன்.
இல்லை :என்னைப்
பார்த்துகொண்டிருக்கிறேன்
என்றான்.
அவன் மேலும் சொன்னான்:
நான் பூபாளமாக அல்ல :
நீலாம்பரியாக வந்திருக்கிறேன் .
விழிப்பில்
நீங்கள் உங்களைத்
தொலைக்கிறீர்கள் .
உறக்கத்தில் உங்களைக்
கண்டெடுக்கிறீர்கள்.
விழிப்பில் நீங்கள்
வேடமணிந்து நடிக்கிறீர்கள் ,
உறக்கத்தில்தான் நீங்கள்
உங்கள் வேடங்களைக்
களைகிறீர்கள்.
விழிப்பு என்பது
வெளியே அலைவது
உறக்கம் என்பது
வீடு திரும்புவது .
விழிப்பு என்பது
காயம் படுவது .
உறக்கம் என்பது
கட்டுப்போடுவது .
விழிப்பு என்பது
செலவு.
உறக்கம் என்பது
வரவு.
விழிப்பு
பிறருக்காக .
உறக்கம்
உங்களுக்காக .
உறக்கம் என்ற
இருட்டறையில்தான்
நீங்கள் எடுத்த
புகைப்படங்கள்
கழுவப்படுகின்றன .
உறக்கம் உங்கள்
உண்டியல் :
கனவுகள் நீங்கள்
சேமிக்கும்
நாணயங்கள் .
உறக்கம் உங்கள்
தாய்முலையாகவும்.
கனவு நீங்கள்
குடித்து வளரும்
பாலாகவும் இருக்கிறது .
உறக்கத்தில்தான்
மரணத்தை
ஒரு காதலியாய்
அனுபவிக்க முடிகிறது .
விழிப்பு என்பது வெறும்
இமை திறப்பல்ல :
அவ்வாறே
உறக்கம் என்பது வெறும்
இமை மூடல் அல்ல .
கண்களை
மூடிக் கொண்டவளே
காண முடியாததைக்
காண்கிறான் .
உங்கள் உறக்கம்
சுற்றுவது தெரியாதபடி சுற்றும்
பம்பரத்தின் உரக்கமாய்
இருக்கட்டும் .
உங்கள் துயில்
அறிதுயிலாய் இருக்கட்டும் .
அதற்காகப் பாம்பின் மீது
படுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் .
உறக்கமே உங்கள்
விழிப்பாகட்டும் .
பித்தன் -கவிக்கோ (74-75)

Comments
Post a Comment