உறக்கம்-பித்தன் -கவிக்கோ (74-75)

 

உறக்கம்

 

பித்தன்

கண் மூடியபடி

படித்திருந்தான் .

 

என்ன உறங்குகிறாயா ?

என்று கேட்டேன்.

 

இல்லை :என்னைப்

பார்த்துகொண்டிருக்கிறேன்

  என்றான்.

 

அவன் மேலும் சொன்னான்:

 

நான் பூபாளமாக அல்ல :

நீலாம்பரியாக வந்திருக்கிறேன் .

 

விழிப்பில்

நீங்கள் உங்களைத்

தொலைக்கிறீர்கள் .

உறக்கத்தில் உங்களைக்

 கண்டெடுக்கிறீர்கள்.

 

விழிப்பில் நீங்கள்

வேடமணிந்து நடிக்கிறீர்கள் ,

உறக்கத்தில்தான் நீங்கள்

உங்கள் வேடங்களைக்

 களைகிறீர்கள்.

 

விழிப்பு என்பது

வெளியே அலைவது

 உறக்கம் என்பது

 வீடு திரும்புவது .

 

விழிப்பு என்பது

காயம் படுவது .

உறக்கம் என்பது

கட்டுப்போடுவது .

 

 

விழிப்பு என்பது

செலவு.

உறக்கம் என்பது

வரவு.

 

 

 

விழிப்பு

பிறருக்காக .

உறக்கம்

உங்களுக்காக .

 

 

 

உறக்கம் என்ற

இருட்டறையில்தான்

 நீங்கள் எடுத்த

புகைப்படங்கள்

கழுவப்படுகின்றன .

 

 

 

உறக்கம் உங்கள்

உண்டியல் :

கனவுகள் நீங்கள்

 சேமிக்கும் நாணயங்கள் .

 

 

 

உறக்கம் உங்கள்

தாய்முலையாகவும்.

கனவு நீங்கள்

குடித்து வளரும்

பாலாகவும் இருக்கிறது .

 

 

 

உறக்கத்தில்தான்

மரணத்தை

ஒரு காதலியாய்

அனுபவிக்க முடிகிறது .

 

 

 

விழிப்பு என்பது வெறும்

 இமை திறப்பல்ல :

அவ்வாறே

உறக்கம் என்பது வெறும்

 இமை மூடல் அல்ல .

 

 

 

கண்களை

மூடிக் கொண்டவளே

 காண முடியாததைக்

காண்கிறான் .

 

 

 

உங்கள் உறக்கம்

சுற்றுவது தெரியாதபடி சுற்றும்

பம்பரத்தின் உரக்கமாய்

இருக்கட்டும் .

 

 

 

உங்கள் துயில்

அறிதுயிலாய் இருக்கட்டும் .

அதற்காகப் பாம்பின் மீது

படுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் .

 

உறக்கமே உங்கள்

 விழிப்பாகட்டும் .

 

 

 

 

பித்தன் -கவிக்கோ (74-75)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி