கூட்டம்-பித்தன் -கவிக்கோ (77-78)
கூட்டம்
என்ன
தனியாக அமர்ந்திருக்கிறாய் ?
என்று பித்தனிடம் கேட்டேன்.
யாரும் தனியாக
இருக்க முடியாது .
ஒவ்வொரு மனிதனும்
ஒரு கூட்டம் தான் ‘
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான்:
உன் ரத்தம்
ஒரு சமுத்திரம் .
அதில் வந்த
நதிகள்
எத்தனை என்பதை
நீ அறிய மாட்டாய்.
ஒரு கூட்டலின்
மொத்தம் நீ .
உன் மதிப்பு
உன்னுடையதில்லை .
நீ காணும்
ஒவ்வொரு காட்சியாலும்
நீ கர்ப்பம் அடைகிறாய் .
நீ கேட்கும்
ஒவ்வொரு ஒலியாலும்
நீ பெருகுகிறாய் .
உன் மூளை
முக்கோடி பூக்களின்
தேன் கூடு .
உன் கைரேகைகள்
உன் மூதாதையாரின்
கையெழுத்துக்கள்.
உன் சிந்தனைகள்
உன் சம்பாத்தியம் அல்ல :
அவை உன்னில் தூவப்பட்ட
விதைகளின் விளைச்சல் .
உன் பேச்சு
உன்னுடையதில்லை :
நீ வெறும் புல்லாங்குழல்.
உன் குணங்களும்
மர்மக் கைகள்
இட்ட நாணயங்களே .
நீ வெறும் உண்டியல்தான்
உன் கண்ணீர்
உன்னுடையதில்லை :
அது ஒரு
மகா சமுத்திரத்திலிருந்து
உன் வழியாக
கசியும் நீர் தான் .
நீ வெறும்
ஊற்றுக் கண்தான் .
உன் புன்னகை உன்னுடையதில்லை :
அது ஒரு
பெரொளியிலிருந்து
பாயும் கிரகணமே .
நீ வெறும் சாளரம் தான் .
இறந்து போனவர்கள்
எல்லாம்
உன்னில்
புனர்ஜென்மம்
அடைந்திருக்கிறார்கள் .
உனக்குள்
எல்லோரும் இருக்கிறார்கள் .
உன் பகைவனும்
இருக்கிறான் .
பித்தன் -கவிக்கோ (77-78)

Comments
Post a Comment