கூட்டம்-பித்தன் -கவிக்கோ (77-78)

 

கூட்டம்

என்ன

தனியாக அமர்ந்திருக்கிறாய் ?

என்று பித்தனிடம் கேட்டேன்.

 

யாரும் தனியாக

இருக்க முடியாது .

ஒவ்வொரு மனிதனும்

ஒரு கூட்டம் தான் ‘

என்றான் பித்தன் .

 

அவன் மேலும் சொன்னான்:

 

உன் ரத்தம்

 ஒரு சமுத்திரம் .

அதில் வந்த

நதிகள்

எத்தனை என்பதை

நீ அறிய மாட்டாய்.

 

ஒரு கூட்டலின்

 மொத்தம் நீ .

உன் மதிப்பு

உன்னுடையதில்லை .

 

நீ காணும்

ஒவ்வொரு காட்சியாலும்

நீ கர்ப்பம் அடைகிறாய் .

 

நீ கேட்கும்

ஒவ்வொரு ஒலியாலும்

நீ பெருகுகிறாய் .

 

உன் மூளை

முக்கோடி பூக்களின்

தேன் கூடு .

 

உன் கைரேகைகள்

உன் மூதாதையாரின்

 கையெழுத்துக்கள்.

 

 

உன் சிந்தனைகள்

உன் சம்பாத்தியம் அல்ல :

அவை உன்னில் தூவப்பட்ட

விதைகளின் விளைச்சல் .

 

உன் பேச்சு

உன்னுடையதில்லை :

நீ வெறும் புல்லாங்குழல்.

 

 

 

 

உன் குணங்களும்

மர்மக் கைகள்

இட்ட நாணயங்களே .

நீ வெறும் உண்டியல்தான்

 

உன் கண்ணீர்

உன்னுடையதில்லை :

அது ஒரு

மகா சமுத்திரத்திலிருந்து

உன் வழியாக

கசியும் நீர் தான் .

 

நீ வெறும்

ஊற்றுக் கண்தான் .

 

உன் புன்னகை உன்னுடையதில்லை :

அது ஒரு

பெரொளியிலிருந்து

பாயும் கிரகணமே .

நீ வெறும் சாளரம் தான் .

 

 

இறந்து போனவர்கள்

எல்லாம்

உன்னில்

புனர்ஜென்மம்

அடைந்திருக்கிறார்கள் .

 

உனக்குள்

எல்லோரும் இருக்கிறார்கள் .

உன் பகைவனும்

 இருக்கிறான் .

 

பித்தன் -கவிக்கோ (77-78)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி