தீக்குச்சி-பித்தன் -கவிக்கோ (80-81)
தீக்குச்சி
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது .
எல்லோரும்
தீக்குச்சியை வணங்கினார்கள்.
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான் .
ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய் ?
என்று கேட்டேன் .
ஏற்றப்பட்டதை விட
ஏற்றிவைத்தது
உயர்ந்ததல்லவா ? என்றான்.
அவன் மேலும் சொன்னான் :
தீக்குச்சி தான்
பிரசவிக்கிறது .
விளக்கோ
வெறும் தொட்டில் .
தீக்குச்சி தான்
எழுதுகிறது
விளக்கோ
வெறும் காகிதம் .
தீக்குச்சி
பிச்சை போடுகிறது
விளக்கோ
வெறும் பிச்சைப்
பாத்திரம்.
தீக்குச்சி
ஒரே வார்த்தையில்
பேசி விடுகிறது .
விளக்கோ
வளவளக்கிறது .
தீக்குச்சி
ஒளிக்காகத் தன்னையே
தியாகம் செய்து
கொள்கிறது.
விளக்கோ
ஒளியினால் பிழைக்கிறது
நீங்கள்
உங்கள் தீக்குச்சிகளைக்
கொண்டாடுவாதில்லை .
விளக்குகளையே
கொண்டாடுகிறீர்கள் .
அதனால்தான்
உங்கள் திருவிழாக்கள்
இருட்டாகவே இருக்கின்றன
நீங்களும்
தீக்குச்சியாக இருக்க
விரும்புவதில்லை .
விளக்காக இருக்கவே
விரும்புகிறீர்கள்
அதனால்
சூரிய வேளையில்
நீங்கள் அணைக்கப்பட்டு
விடுகிறீர்கள் .
இதோ ,இந்தக்
குச்சியிலிருந்து
புறப்படும்
அமர ஒளியை
உங்களால்
காண முடிந்திருந்திருந்தால்
உங்கள் ஆடபர விளக்குகளின்
பிரகாசத்தில்
உங்கள் கண்
குருடாயிருந்திருக்காது .
பித்தன் -கவிக்கோ (80-81)

Comments
Post a Comment