புத்தகம்-பித்தன் -கவிக்கோ (83-84)

 

புத்தகம்

 

 

 

பித்தன்

மழைக்காகப்

பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினான் .

 

 

குழந்தைகளின் கையிலிருந்த

 புத்தகங்க்களைப் பார்த்து ,

 

 

 

புத்தகங்களே !

சமர்த்தாயிருங்கள் .

 குழந்தைகளை

கிழித்து விடாதீர்கள் “ என்றான்

 

 

அவன் மேலும் சொன்னான் .

 

குழந்தைகளே

பாடப் புத்தகங்களாக

 இருக்கிறார்கள் .

அவர்கள் கையில் ஏன்

காகிதப் குப்பைகளைத்

தருகிறீர்கள் ?

 

 

உங்கள் புத்தகங்கள்

கண்களைத் திறப்பதில்லை .

ஊற்று கண்களைத்

தூர்த்து விடுகின்றன .

 

காகித ஓடங்களை

நம்பி இருப்பவர்களே!

 

நீங்கள் எப்படி

அக்கரை போய்ச் சேர்வீர்கள் ?

 

இதோ !

இரவு பகல் என்ற ஏடுகள்

உங்களுக்காகவே

 புரளுகின்றன,

 நீங்களோ அவற்றைப்

படிப்பதில்லை .

 

 

இதோ !

உண்மையான

உயிர் மெய் எழுத்துக்கள்

 உங்கள் முன் நடமாடுகின்றன .

நீங்களோ அவற்றைக்

கற்றுக்கொள்வதில்லை .

 

 

ஒவ்வொரு பூவும்  

பாடப் புத்தகமாக இருப்பதை

நீங்கள் அறிவதில்லை .

 

நீங்கள்

நட்சத்திரங்களை

படிக்கக்  கற்றிருந்தால்

 உச்சரிக்க முடியாத

எழுத்துக்களில்

அதிகமான அர்த்தம்  இருப்பதை

 அறிந்திருப்பீர்கள் .

 

 

நீங்கள்

 மின்னலின் வாக்கியங்களை

வாசிக்க முடிந்திருந்தால்

ஒளியின் ரகசியத்தை

அறிந்திருப்பீர்கள் .

 

உங்களுக்குக்

கண்ணீர்த் துளிகளைப்

 படிக்கத் தெரிந்திருந்தால்

நீங்கள்

 மனிதனின் சாரத்தை  

அறிந்திருப்பீர்கள் .

 

எழுத்துக்களால் அல்ல ,

காயங்களால் கற்பதே

கல்வி என்பதை

அறிந்து கொள்ளுங்கள் .

 

உங்கள் புத்தகங்கள்  

விளக்குகளாக இருக்கின்றன .

சூரியனைக் காண

விளக்குகள்

தேவைப்படுவதில்லை .

 

 

பித்தன் -கவிக்கோ (83-84)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி