வார்த்தை -பித்தன் -கவிக்கோ (86)
வார்த்தை :
பித்தன் பூவனத்தில் இருந்தான் .
என்ன செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
பூவின் மொழியைக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றான் .
அவன் மேலும் சொன்னான் .
பூவைப் போல
ஐந்து பொறிகளிடமும்
பேசும் வார்த்தை
உங்கள் மொழிகளில்
உண்டா ?
ஒவ்வொரு
பூவிலும்
ஒரு வேதம்
வெளிப்படுகிறது .
பூவின் மொழி
ஆழமானது :
அதனால் தான்
அதில் சப்தமில்லை .
நீங்கள்
அர்த்தத்தை
வார்த்தைக் கூண்டுக்குள்
அடிக்கிறீர்கள் .
வார்த்தையின் சப்தம்,
அர்த்தத்தின் சிறகுகள்
படபடக்கும் ஓசை தான் .
உங்கள் வார்த்தைகளில்
இடி மட்டும்தான்
இருக்கிறது
மின்னலும் இல்லை :
மழையும் இல்லை .
உங்கள் வார்த்தைகளில்
இடி மட்டும்தான்
இருக்கிறது .
மின்னலும் இல்லை :
மழையும் இல்லை
சப்தத்திற்குப்
பசியெடுக்கும்போது
அது அர்த்தத்தைத்
தின்றுவிடுகிறது .
சப்தத்திற்குப்
பசியெடுக்கும் போது
அது அர்த்தத்தைத்
தின்றுவிடுகிறது.
நீங்கள்
அர்த்தத்தை அல்ல.
சப்தத்தையே
வழிபடுகிறீர்கள் .
வார்த்தையைச்
சிலுவையில்
அறையுங்கள் .
அதன் ரத்தம்
உங்கள்
ஜென்ம பாவத்தைக்
கழுவட்டும் .
பித்தன் -கவிக்கோ (86)

Comments
Post a Comment