பித்தன் - உரிமை -கவிக்கோ (87-90)

 

உரிமை

 

 

உரிமை முழக்கமிட்டுச்சென்ற

ஊர்வலத்தை பார்த்துச்

சிரித்தான் பித்தன்.

 

 

 

ஏன் சிரிக்கிறாய் ?

என்று கேட்டேன் .

 

 

சூரியோதோதயத்தைக் கோரும்

குருடர்களைக் கண்டதால்

சிரிப்பு வராதா ?

என்றான் பித்தன்.

 

அவன் மேலும் சொன்னான் .

 

சூரியன் உதித்தாலும்

இவர்கள்

பார்க்கப் போவதில்லை.

 

 

ஒளியைப் பற்றி

அறியாமலே

இவர்கள்

ஒளியைக் கேட்கிறார்கள்.

 

 

இவர்கள்

அடைப்தையெல்லாம்

சிறை என்கிறார்கள் :

கட்டுவதை எல்லாம்

விலங்கு என்கிறார்கள் .

 

 

வானத்தில் பறக்கும் பட்டம்

நுலை விலங்கென்று

அறுத்துக்கொண்டால்

தரையில் விழுந்துவிடும் .

 

 

 

 

 

தீபச் சுடர்

 சிம்னியைக் கூண்டென்று

உடைத்து விட்டால்

காற்றில் அணைந்து போகும்.

பூக்கள் வெலியைச் 

சிறையென்று

தகரத்து விட்டால்

மாடுகளுக்குத் தீனியாகிவிடும்.

 

 

 

நதிகளை நீங்கள்

பார்த்ததில்லையா ?

அவை

சுதந்திரமாகத்தான்

ஓடுகின்றன .

ஆனால்

தங்களுக்கெனக்

கரைகளைத்  தாங்களே

உண்டாகிக்கிக்  கொள்கின்றன .

 

 

 

சுதந்திரமாகத் திரயும்

காற்று

புல்லாங்குழலுக்குள்

அடைபட்டு

விரல்களின் ஆணைக்கு  

இணங்கும் போதுதான்

இசையாகிறது.

 

 

காதலில்

 சிறைப்படுவது

சுதந்திரத்தை விடச்

சுகமானதல்லவா ?

 

அன்புக்குக் கட்டுப்படுவது

உரிமை விட

உன்னதமானதல்லவா ?

 

வேர்களை

விலங்கென்று நினைக்கும்

மரங்களுக்குப்

பூக்கள் கிடைக்குமா ?

 

 

பறவைக்குச்

 சிறகு முளைப்பதே

முட்டைச் சிறைக்குள்தான் .

 

இவர்கள்

சிறகுகளைச்

சிறகுகளுக்காகவே

 கேட்கிறார்கள் .

 

இவர்கள்

சிறகுகள்

பறப்பதற்கே

என்கிறார்கள் .

 

 

இவர்கள்

சிறகுகளை

இலட்சியம்

என்கிறார்கள் .

அவை வெறும்

சாதனம்தான் என்பதை

இவர்கள் அறிவதில்லை .

 

 

இவர்கள்

இரைதேடிச்

செல்வதுமில்லை :

கூட்டுக்குத்

திரும்புவதுமில்லை .

 

 

 

 

சிறகை விரிக்க

ஒரு நேரம் உண்டு :

அப்படியே

சிறகை  மடக்கவும்  

ஒரு நேரம் உண்டு.

 

சிறகை

மடக்காத பறவை

கூட்டை அடைவதில்லை .

 

பித்தன் -கவிக்கோ (87-90)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி