பித்தன் -கவிக்கோ (96-99)

 

பாரம்

 

பித்தன்

வீதியோரம் இருந்த

சுமைதாங்கியைப்

பெயர்த்துக் கொண்டிருந்தான்

 

என் இப்படச்  

செய்கிறாய் ?

என்று கேட்டேன்

 

சுமைதாங்கி

பாரத்தை  இறக்குகிறது

அதனால் உங்கள்

எடை குறைகிறது போகிறது

நான் உங்கள் எடையைக்

கூட்ட வந்திருக்கிறேன் என்றான் .

 

அவன் மேலும் சொன்னான்

 

பாரத்தை

இறக்கி வைப்பது

மகிழ்ச்சியானது

என்கிறீர்கள்

ஆனால்

மரணத்தில்

அழுகிறீர்களே , ஏன் ?

 

பாரம்

மகிழ்ச்சியானது என்று

நான் சொல்கிறேன்

சுமை கிடைத்தால்

கூலிக்காரன்

மகிழ்கிறான் அல்லவா?

 

உங்கள் பாரமே

உங்களுக்குக்

கூலியாவதை

அறிவீர்களா ?

 

நாம்

பூமிக்கு வந்ததே

பாரம்  சுமப்பதற்குத் தான்

 

இரவையும் பகலையும்

காவடி தூக்கிச் செல்லும்

நாளைப் போலவே

நீங்களும்

கண்ணீரையும் புன்னகைளையும்

சுமந்து நடக்கிறீர்கள்

 

தெரிந்து  கொள்ளுங்கள்

புன்னகையும்

ஒரு பாரம்தான்

 

நீங்கள்

பறந்துவிடாமலிருக்க

உங்களுக்கு ஏதாவது

 ஒரு பாரம் தேவை

 

 

 

 

சில பாரங்களை

நீங்கள் விரும்பித்

தூக்கிக் கொள்கிறீர்கள் .

 

சில பாரங்கள்

உங்கள் மீது

பலவந்தமாய்ச்

சுமந்தப்படுகின்றன .

 

உலகம்

உங்கள் பாரங்களை வைத்தே

உங்களை எடை போடுகிறது .

 

 

 

சில பாரங்களை நீங்கள்

இறக்கி வைத்திட முடியும்.

சில பாரங்களை நீங்கள்

இறக்கி வைக்க மாட்டீர்கள் .

 

உங்கள் அந்தரங்கங்களை

எந்த சுமைதாங்கியிலாவது

நீங்கள்

இறக்கி வைப்பீர்களா ?

 

தொளில் சுமக்கும்

பாரத்தை விட

இதயத்தில் சுமக்கும் பாரம்

கனமானதல்லவா ?

 

சில பாரங்களை

 சுமக்கும்போது

நீங்கள்

நிமிர்கிறீர்கள்

 

 

 சில பாரங்களை

 இறக்கிவைக்கும் போது

நீங்கள்

குனிகிறீர்கள்

 

கனமான பாரம்தான்

கழுத்தை வளைக்கும்

என்கிறீர்கள்

இல்லை :

மெல்லிய நாணத்தால்

பெண்

தலை குனிவதை

நீங்கள் பார்த்ததில்லையா ?

 

உங்களிவிடப்

பெரிய பாரதத்தை சுமப்பது

கடினம் என்று

நினைக்கிறீர்கள்

இல்லை:

காதலை நீங்கள்

சுமப்பதில்லையா ?

 

மென்மையானது

கனக்காது என்று

நினைக்கிறீர்கள் .

இல்லை :

உறக்கம்

இமைகளில்

கனக்கிறதல்லவா ?

 

உங்கள் பாரம்

உங்களுக்கு

அன்னியோன்னியம்

ஆகட்டும் :

சொல் சுமக்கும்

அர்த்தம் போல் .

 

உங்கள் பாரம்

உங்களுக்கு

ஈர்ப்பை உண்டாக்கட்டும்

பெண் சுமக்கும்

பருவத்தைப் போல்.

 

உங்கள் பாரம்

உங்களை விட

மதிப்புடையதாகட்டும்

திரி சுமக்கும்

சுடரைப் போல்.

 

பித்தன் -கவிக்கோ (96-99)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி