நீலிக்கண்ணீர் வடிக்காதே !
நீலிக்கண்ணீர்
வடிக்காதே !
அடிக்கரும்பை விட
நுனிக்கரும்பின்
சுவை
அதிகம் தானே ?
அதை அனுபவித்தான்
அது நான்கு மாதமாக
நுனிக்கரும்பின்
கொல்லைக்குள்ளே.
கொல்லைக் -காரி
விளக்கை
பிடித்துக்கொண்டு
யாரும் வராமல்
பார்த்துக்
கொண்டாள்.
காரிகை
யாருமில்லையது
காதலியின்
தாயார்தான் .
விளைவு
சிப்பிக்குள்
முத்து துடிப்பு
கேட்டவுடன்
காரிகை கத்தினாள்
–ஊரார் துப்புனர்.
ஊரார்கள் கூடி
தேர்க்காலில்
நசுக்காமல்
அடிக்கரும்பை
ருசித்தவனிடத்தே
பால்-பழம்
கொடுத்து
சேர்த்து வைத்த
கொடுமை என்ன
சொல்வது ?
ஒழுக்கம்
ஒழுகியது
ஒழுங்கீனத்தால் .
சேர்த்துவைத்த
ஊராரை
நீலி வந்து பலி-வாங்கனும்
அதுவே சாபம் .
நீலிக்கண்ணீர் என்றால் என்ன?
வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால்
கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள்
பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே
வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள்.
அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல
மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல்
அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அது
தன் மனைவி அல்ல, பேய் என்று அவன் அச்சத்தோடு
வாதிடுகிறான். ஆனால் மக்கள் அதை நம்பாமல் ஒருவேளை அவன் பேய் என்று சந்தேகிக்கும்
அந்தப் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்களும் தீக்குளிப்போம் என்று சமாதானம்
செய்கிறார்கள். ஆனால் பேயான நீலி அவனைக் கொன்றுவிட அந்த மக்கள் சொன்னதுபோல்
தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் என்ற பதம் வருகிறது. நீலி
தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும், எந்த பாவமும் செய்யாத சிலரும் உயிர் துறந்தது வசைக்குரிய ஒன்றாக
மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. பக்திக்காலத்தில் பெரும்பாலும்
நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும், வாணிகர்கள் துன்பம் அடைந்ததற்கும் குறியீடாகச் சொல்லப்பட்ட கதையாகக்
காணமுடிகிறது.
படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
………………
(விவேக சிந்தாமணி—பாடல் 30)
நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள்.
நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது
என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை
அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின்
ரூபமானது.
அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு
இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான்.
அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல
உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்தும்
கொள்கிறாள். அப்போது அவன் அவளை மனைவியென ஏற்க மறுக்கிறான்.
திருவாலங்காட்டுக்கு வேளாளர்களுக்கு இந்த வழக்கு வந்து சேர்கிறது. வணிகன் தனது
மனைவி இல்லை என்றும் இவளோடு சென்றால் தன்னை இந்தப் பேய் கொன்றுவிடுமு என்றும்
கூறுகிறான். வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு
கூறும்போது அவளது இடுப்பிலிருந்த பிள்ளை அப்பா என அவனை அழைக்கிறது. அப்போது
திகைத்துப் போன வேளாளர்கள் நீ இவளோடு ஒரு வீட்டில் தங்கு. அப்படி உன்னை இவள்
கொன்று விட்டால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம் என்று வேளாளர்கள்
கூறுகின்றனர். அப்படியே தங்கிய ஒரு இரவில் நீலிப்பேயும் வணிகனைக் கொன்று விட்டு
மறைந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியுற்ற எழுபது வேளாளர்களும் தமது வார்த்தையைக்
காப்பாற்றுவதற்காக மறுநாள்காலையில் தீயில் பாய்ந்து மாண்டு போகின்றனர்.
இதுதான் நீலிக்கதை. இப்போது கூட பெண்கள் கண்ணீர் வடித்தால் நீலிக்கண்ணீர்
வடிக்கிறாள் என்று பல ஆண்கள் ஒருமையில் திட்டுவதுண்டு. இந்தக் கதை ஏழாம்
நூற்றாண்டில் திருஞானசம்பந்தரின் திருவாலங்காட்டு திருப்பதிகத்தில் முதல் முதலாகப்
பதிவு செய்யப்படுகிறது.

Comments
Post a Comment