பசி
பித்தனை
விருந்துக்கு அழைத்தேன் .
அவன் மறுத்துவிட்டான் .
ஏன் ?என்று கேட்டேன் .
நீங்கள்
விருந்தைக்
கொண்டாடுகிறவர்கள் .
நானோ ,
பசியை கொண்டாடுகிறவன்
என்றான்.
அவன் மேலும் சொன்னான்:
பசி உங்கள்
வயிற்றில் பிறப்பதற்காக
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
நானோ
பசியின் வயிற்றில்
நீங்கள்
பிறக்கிறீர்கள்
என்கிறேன்.
பசி உங்களை
எரிக்கிறது என்று
நீங்கள் சொல்லுகிறீர்கள் .
நானோ
பசி உங்களைச்
சமைக்கிறது என்கிறேன் .
பசி உங்களை
அழுக்காக்கிறது
என்று
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
நானோ
பசிதான் உங்களைச்
சலவை செய்கிறது
என்கிறேன்.
பசியை நீங்கள்
நோய் என்கிறீர்கள்.
நானோ
பசியை
மருந்து என்கிறேன்.
பசி உங்கள்
காதை அடைக்கிறது
என்று நீங்கள்
சொல்லுகிறீர்கள் .
நானோ
பசிதான் உங்கள்
காதுகளைத் திறக்கிறது
என்கிறேன்.
பசியை நீங்கள்
விலங்கு என்கிறீர்கள்.
நானோ
பசியைச்
சிறகு என்கிறேன்.
அந்த சிறகு
இல்லையென்றால்
நீங்கள் இந்த
உயரங்களை
அடைந்திருக்க மாட்டீர்கள்.
பசியை நீங்கள்
பூட்டு என்கிறீர்கள்.
நானோ
பசியைச்
சாவி என்கிறேன்.
பூமியின்
பொக்கிஷ அறைகளைப்
பசியல்லவா
திறந்து வைத்தது ?
பசி
உங்கள் பூக்களை
மேய்ந்து விடுகிறது
என்று சொல்லுகிறீர்கள்.
நானோ அதுதான்
புரட்சி விதைகளை
தூவுகிறது
என்கிறேன் .
மனிதர்களே !
பசியால்
கர்ப்பம் அடையுங்கள் .
பித்தன் -கவிக்கோ (71-72)

Comments
Post a Comment